சபரிமலைக்கு திருவாபரணம் புறப்பட்டது; சன்னிதானத்தில் சுத்திக்கிரியை துவக்கம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சபரிமலை: சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நாளில் அய்யப்பன் விக்கிரகத்தில் அணிவிக்கும் ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படுகிறது. நேற்று அதிகாலை, 5:00 மணி முதல் பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோவிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்ட திருவாபரணங்களை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மதியம், 12:30 மணிக்கு பின்னர் திருவாபரண பவனி புறப்படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. பேழைகள் அடைக்கப்பட்டு கோவிலில் உச்ச பூஜை நடந்தது. தொடர்ந்து தீபாராதனைக்கு பின்னர் பந்தளம் ராஜ பிரதிநிதி ராஜராஜ வர்மாவுக்கு உடைவாள் வழங்கப்பட்டதும், திருவாபரண பேழைகள் கங்காதரன் குருசாமி குழுவினரின் தலையில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கோவிலில் இருந்து திருவாபரண பேழைகள் வெளியே வந்த போது, ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டது. பக்தர்களின் சரண கோஷம் விண்ணை தொடும் அளவு எழுந்தது. தொடர்ந்து, திருவாபரண பவனி புறப்பட்டது.மகரஜோதி பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் சுத்தி கிரியைகள் நேற்று சன்னிதானத்தில் தொடங்கியது. நேற்று மாலை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் சுத்திகிரியை பூஜைகளை நடத்தினார். இன்று மதியம் உச்ச பூஜைக்கு முன்னால் பிம்பசுத்தி பூஜைகள் நடைபெறும்.