உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வடமாநிலங்களில் மழை: சுரங்கப்பாதை வெள்ளத்தில் சிக்கி வங்கி அதிகாரிகள் இருவர் பலி

வடமாநிலங்களில் மழை: சுரங்கப்பாதை வெள்ளத்தில் சிக்கி வங்கி அதிகாரிகள் இருவர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி புறநகர் பகுதியான பரிதாபாதில், கனமழையால் சுரங்கப்பாதை வெள்ளத்தில் கார் சிக்கியதில், அதில் இருந்த வங்கி அதிகாரிகள் இருவர் பலியாகினர். டில்லி, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. டில்லியில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 100 செ.மீ., மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் டோல்பூர், ஜலோர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களில், உத்தர பிரதேசம், டில்லி, ராஜஸ்தான், உத்தரகண்ட், ஹரியானா, பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், டில்லியின் புறநகர் பகுதியான ஹரியானா மாநிலம் பரிதாபாதில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.குருகிராமின் செக்டார் 31 பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கி கிளையின் மேலாளர் புன்னியஸ்ரேயா சர்மா, 48, மற்றும் காசாளர் விராஜ் திவேதி, 26, ஆகிய இருவரும் பணி முடிந்து மஹிந்திரா எக்ஸ்.யு.வி., 700 காரில் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். அவர்கள், பழைய பரிதாபாத் ரயில்வே சுரங்க பாலத்தை அடைந்த போது, அதில் மழைநீர் தேங்கியிருந்தது.கார் செல்லும் அளவு தான் மழைநீர் தேங்கியிருப்பதாக நினைத்து, புன்னியஸ்ரேயா சுரங்க பாதைக்குள் காரை செலுத்தியுள்ளார். சிறிது துாரம் சென்றதும் கார் மூழ்குவதை அறிந்து இருவரும் வெளியேறி நீந்தி தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால் நீந்த முடியாமல் மூழ்கிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், முதலில் புன்னியஸ்ரேயாவின் உடலை மீட்டனர். பல மணிநேர தேடுதலுக்கு பின், காசாளர் விராஜ் உடல் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சுரங்கத்தில் தேங்கிய மழைநீரை மோட்டார் வைத்து விடிய விடிய அகற்றினர்.

தாஜ்மஹாலில் நீர் கசிவு

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. ஆக்ராவில் நேற்று முன்தினம் 15 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது. இங்குள்ள தாஜ்மஹாலின் வளாகத்தில் தோட்டம் முழுதும் மழை நீரில் மூழ்கியது. தாஜ் மஹாலின் பிரதான குவி மாடத்தில் மழைநீர் கசிவதாக புகார் எழுந்துள்ளது. இதை, தொல்லியல் துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ஆக்ரா வட்டத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் படேல் கூறுகையில், ''தாஜ்மஹாலின் பிரதான குவி மாடத்தில் நீர் கசிந்ததை நாங்கள் பார்த்தோம். எனவே, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக கேமரா வாயிலாக மேற்கூரையை சோதனை செய்தோம். ஆனால், நீர் கசிவால் பிரதான மாடத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதை உறுதிசெய்துள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
செப் 15, 2024 07:12

,நாமதான் வல்லரசு. இன்னும் அஞ்சு வருஷத்தில் டில்லி மழையை தமிழ்நாட்டுக்கு திருப்பி விட திட்டமும், தொழில் நுட்பமும் ரெடியாயிடும்.


புதிய வீடியோ