சென்னை: ஆட்சியில் பங்கு வேண்டும் என்று என்றோ பேசிய வீடியோவை தமது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு பின்னர் அதை நீக்கி தமிழக அரசியலை அடுத்தக்கட்ட பரபரப்புக்கு கொண்டு சென்று விட்டிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.பயணம் வெற்றி
சென்னை விமான நிலையமே இன்று உற்சாக வரவேற்பு, அளப்பறியா சந்தோஷம் என்று நிரம்பி இருந்தது. அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி இருந்தார் முதல்வர் ஸ்டாலின். தமது பயணம் வெற்றி, முதலீடுகள் குவிந்து உள்ளன என்று அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார். வீடியோ
அவர் இறங்கிய அதே தருணத்தில் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார். முதல்வர் ஸ்டாலின் பேட்டி அளித்துக் கொண்டே இருக்க, சிறிது நேரத்திலேயே திருமாவளவன் பேசிய வீடியோ வைரலானது. அந்த வீடியோவின் கருப்பொருள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று அவர் என்றோ பேசிய ஒன்று. பதிவு, நீக்கம்
சரியாக அந்த வீடியோ பதிவானது காலை 8.43 மணி. பதிவிட்ட சிறிதுநேரத்தில் அந்த வீடியோவை அவரே நீக்கவிட்டார். பின்னர் அதே வீடியோ முற்பகல் 11 மணியளவில் மீண்டும் திருமாவளவன் பதிவிட்டார். ஆட்சியில் பங்கு என்ற தலைப்புடன் அந்த வீடியோ இடம்பெற்று இருந்தது. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, கடைசி மனிதனுக்கும் சனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. பரபரப்பு
குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிது நேர இடைவெளிக்கு பின்னர், அந்த வீடியோவை பதிவிட்டு பின்னர் 2வது முறையாக அழித்தது அரசியல் களத்தில் பரப்பரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. என்ன சொல்ல வருகிறார் திருமாவளவன் என்று பேச்சுகள் தமிழக அரசியலில் எழ தொடங்கி உள்ளன. 2 முறை பதிவு, 2 முறை நீக்கம் என்ற அந்த வீடியோ தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. பிரதான கேள்வி
அது அதர பழசான வீடியோ என்று ஒரு பக்கம் சப்பைக்கட்டு கட்டினாலும் இப்போது எதற்காக அதை வெளியிட வேண்டும்? என்ன தேவை இருக்கிறது என்பது தான் பிரதான கேள்வியாக இருக்கிறது.அம்சம்
இதுகுறித்து தமிழக அரசியலை உற்றுநோக்குபவர்கள் கூறும் கருத்துகள் வருமாறு: அரசியல் தளத்தில் கூட்டணியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பதை அனைத்துக் கட்சிகளும் விரும்பும் ஒரு அம்சம்தான். சில காலம் முன்பு தி.மு.க.,வில் காங்கிரஸ் இதே போன்ற ஒரு சர்ச்சையான, கூட்டணி ஆட்சியில் பங்கு என்ற விவகாரத்தை முன் வைத்தது நினைவிருக்கலாம்.நிலைப்பாடுகள்
ஆனால் அவர்கள் சொன்ன காலம் வேறு, விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் இப்போது வீடியோவை வெளியிட்ட காலச்சூழல் வேறு. விடுதலை சிறுத்தைகள், தி.மு.க., இடையே கூட்டணியில் விரிசல் ஆரம்பமாகிவிட்டதாக தோன்றுகிறது. அதற்கு அண்மைக் காலமாக தி.மு.க.,வின் அரசியல் நிலைப்பாடு மற்றும் ஆட்சியில் அவர்கள் மேற்கொண்ட சில நிலைப்பாடுகளை கூறலாம்.உன்னிப்பு
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டது, ஆளுநர் தேநீர் விருந்து, முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பான அறநிலையத்துறையின் நடவடிக்கைகள் என பல விஷயங்களை பட்டியலிடலாம். இப்படி அண்மைக்காலமாக தி.மு.க.,வின் நிலைப்பாட்டை விடுதலை சிறுத்தைகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.அழைப்பின் காரணம்
பா.ஜ., மற்றும் அதன் நிலைப்பாட்டோடு தி.மு.க., ஒன்றி வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதன் தாக்கத்தில் தான் இதுபோன்ற வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் தொடக்கமே மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுத்தது என்று கூறலாம் என்று முத்தாய்ப்பாய் புள்ளி வைக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.அன்றே சொன்னோம்
ஆனால் விடுதலை சிறுத்தைகளின் அரசியல் பாதையை உன்னிப்பாய் கவனிப்பவர்கள் கூறும் கருத்துகள் வேறு விதமாக இருக்கின்றன. கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதை திருமாவளவன் இன்று ஏதோ புதியதாக பேசவில்லை. 2015ம் ஆண்டே கூட்டணி ஆட்சி தொடர்பான கருத்தரங்கிற்கு ஒவ்வொரு கட்சி தலைவர்களையும் சந்தித்து திருமாவளவன் அழைப்பு விடுத்ததை சுட்டிக்காட்டுகின்றனர். இன்று எதற்காக?
ஆனால் இதை தி.மு.க.,வின் நடவடிக்கைகளை நன்கு அறிந்தவர்களும், அவர்களின் அரசியல் நகர்வுகளை தெரிந்தவர்களும் ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை என்பதே தி.மு.க., முகாமில் இருந்து வெளியாகும் தகவல். அன்று சொன்னதை இன்று ஏன் மீண்டும் கூறி சர்ச்சையாக்க வேண்டும் என்பது அவர்களின் ஒரு வரி கேள்வி.அதிர்ச்சி
அமெரிக்காவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் சென்னை வந்த அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தமது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு நீக்கிய வீடியோ விவகாரம், தி.மு.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றிருக்கின்றன. நம்பமுடியவில்லை
ஆனால் இதை எல்லாம் ஓரம்கட்டும் விதமாக, முத்தாய்ப்பாக, அந்த வீடியோவை பதிவு செய்தது நான் அல்ல, எனது அட்மின் என்று விளக்கம் அளித்து இருக்கிறார் திருமாவளவன். எல்லாத்தையும் நன்றாக கவனித்து அரசியல் பேசும் வாக்காள பெருமக்கள் சொல்வது ஒன்றே ஒன்று தான்...இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு?
புது வீடியோ தான்!
மதுரையில் திருமாவளவன் அளித்த மற்றொரு பேட்டியில் கூறியதாவது: தி.மு.க.,கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்போதும் பேசவில்லை. இப்போதும் அக்கூட்டணியில் தான் உள்ளது. மாநாடு நடத்துவதில் ஒரு சதவீதம் கூட அரசியல் கணக்கு இல்லை. ஆட்சி அதிகாரம் குறித்து வெளியாகி உள்ள வீடியோ புதியது தான். செங்கல்பட்டில் பேசியதை அட்மின் வெளியிட்டு உள்ளார். இரண்டு அட்மின் உள்ள நிலையில், ஒருவர் பதிவேற்றி உள்ளார். மற்றொருவர் அதனை நீக்கி உள்ளார். ஏன் நீக்கினார் என்பது குறித்து இனிமேல் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.