பண்டிப்பூரில் இரவில் வாகனங்களுக்கு அனுமதி? சிவகுமாருக்கு மைசூரு எம்.பி., யதுவீர் கண்டனம்!
சாம்ராஜ்நகர்; பண்டிப்பூரில் இரவில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்குவது குறித்து, பரிசீலிப்பதாக துணை முதல்வர் சிவகுமார் கூறியதற்கு, மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.கர்நாடகா - கேரளா - தமிழக எல்லையில் சாம்ராஜ் நகர் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் குண்டுலுபேட் தாலுகாவில் பண்டிப்பூர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி சாலை வழியாக, கேரளாவின் வயநாட்டிற்கு எளிதாக சென்று விடலாம். இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இரவில் வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்தன. இதனால் இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை, பண்டிப்பூர் வனப்பகுதி சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதித்து, கடந்த 2009ல் சாம்ராஜ் நகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கேரளா தொடர்ந்த வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.,யாக இருந்த, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பண்டிப்பூர் வனப்பகுதி சாலை வழியாக இரவில் வாகனங்கள் செல்ல, கர்நாடக அரசிடம் அனுமதி வாங்கி தருவதாக கூறி இருந்தார்.வயநாடு தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்காவை ஆதரித்து பிரசாரம் செய்த, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், பண்டிப்பூரில் இரவில் வாகன போக்குவரத்து குறித்து, பரிசீலிப்பதாக கூறினார். இதற்கு மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.அவர் தனது, 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், 'வயநாடு இடைத்தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக, கர்நாடகாவின் இயற்கை செல்வமான பண்டிப்பூர் வனப்பகுதி வழியாக இரவில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்குவது பற்றி பரிசீலிப்பதாக, துணை முதல்வர் சிவகுமார் கூறியது பொறுப்பற்ற கருத்து. அதை கண்டிக்கிறேன்.'பண்டிப்பூரில் இரவில் வாகனங்கள் சென்றால், வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். மனித - வனவிலங்கு மோதலும் அதிகரிக்கும். 'மற்ற மாநில லாபத்திற்காக கர்நாடக மாநில வனவிலங்குகளுக்கு, ஆபத்து ஏற்படுத்துவது நியாயமானது இல்லை. சுற்றுச்சூழல் மண்டலங்களை பாதுகாப்பதில் அரசு சமரசம் செய்ய கூடாது' என்று பதிவிட்டு உள்ளார்.