இந்தியாவின் பழமையான கல்லூரி - சிறந்த கல்வி நிறுவனங்கள் (41)
கோல்கட்டாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரி 1817ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது தான் இந்தியாவின் மிகப்பழமையான கல்லூரி. இளநிலை மற்றும் முதுநிலைப்படிப்பில் இன்றும் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமாக இது திகழ்கிறது. இந்தியக்கல்லூரிகள் பற்றி நடத்தப்படும் கருத்துக்கணிப்புகளில் பலமுறை இந்த கல்லூரி முதலிடத்தை பிடித்துள்ளது. முதன்முதலில் சுப்ரீம் கோர்ட் கோல்கட்டாவில் தான் தொடங்கப்பட்டது. அப்போது மாநிலத்தின் ஆங்கில அறிவை வளர்க்கும் நோக்கத்தில் இந்த கல்லூரியை தொடங்கினர். 20 மாணவர்களுடன் இந்த கல்லூரி தொடங்கப்பட்டது. 1857ம் ஆண்டு கோல்கட்டா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதும், அதனுடன் இந்த கல்லூரி இணைக்கப்பட்டது. 1953ம் ஆண்டு ‘பிரசிடென்சி கல்லூரி’யாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெங்கால் இன்ஜினியரிங் அண்டு சயின்ஸ் யுனிவர்சிட்டி மற்றும் இந்திய புள்ளியியல் கழகம் ஆகிய இரண்டு புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள் முதலில் இந்த கல்லூரியில் இருந்து தான் செயல்பட தொடங்கின. இந்த கல்லூரியில் உள்ள துறைகள்- வங்காளம்- ஆங்கிலம்- இந்தி- சமஸ்கிருதம்- வரலாறு- கணிதம்- சட்டம்- புவியியல்- பொருளாதாரம்- தத்துவம்- இயற்பியல்- தாவரவியல்- புள்ளியியல்- பயோகெமிஸ்ட்ரி- ஜியாலஜி- சோஷியாலஜி- பிசியாலஜி- பொலிட்டிக்கல் சயின்ஸ்- மாலிக்குலர் பயாலஜி அண்டு ஜெனிட்டிக்ஸ் மேற்கு வங்கத்தை சேர்ந்த தலைவர்கள், கலைஞர்கள் பலரும் இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்களே. விவேகானந்தர், தேசிய கீதம் இயற்றிய ரவீந்திரநாத் தாகூர், நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென், ஆஸ்கார் வென்ற சினிமா இயக்குனர் சத்யஜித் ரே போன்ற பிரபலங்கள் இங்கு படித்தவர்கள். தேசத்தலைவர்களான சுரேந்திரநாத் பானர்ஜி, நேதாஜி, பிதான் சந்திரராய், பக்கீம் சந்திர சட்டர்ஜி ஆகியோரும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்களே. மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, தற்போதைய முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, பிரபல கவிஞர் மைக்கேல் மதுசூதன் தத், விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ், அசுதோஷ் முகர்ஜி, சத்தியேந்திர நாத் போஸ், சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, சினிமா இயக்குனர் அபர்னா சென், நடிகர் அசோக் குமார், பிரபல பத்திரிகையாளர் பிரிதிஷ் நந்தி, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் ஆகியோரும் பிரசிடென்சி கல்லூரியின் முன்னாள் மாணவர்களே. கல்லூரி வளாகத்துக்கு வெளியே மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான தனித்தனியான விடுதிகள் அமைந்துள்ளன. இங்குள்ள நுõலகத்தில் பழைய அரிய புத்தகங்கள் பல சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 3 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் இங்குள்ளன. இது தவிர ஆயிரக்கணக்கான ‘சிடி’க்களும் இங்குள்ளன. புகழ்பெற்ற ஐரோப்பிய ஓவியர்கள் வரைந்த அரிய ஓவியங்களும் இங்கு பாதுகாக்கப்படுகிறது. இன்டர்நெட் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.