உள்ளூர் செய்திகள்

கலைக் கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டிய முதல்வர் - இன்னும் துவங்காத கட்டுமானப் பணிகள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கலைக் கல்லூரிக்கு முதல்வர் ஜெ., அடிக்கல் நாட்டி 5 மாதங்களுக்கு மேலாகியும் கட்டுமான பணிகள் துவங்காதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியில் அரசு கல்லூரியை கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் முதல்வர் ஜெ., துவக்கி வைத்தார். பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி., கணிதம், கணிப்பொறியியல் பாடப் பிரிவுகள் உள்ளன. தற்காலிக இடம்: கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்காலிக இடம் ஒதுக்கி கல்லூரி துவங்கியது. தற்போது 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 500 பேர் மாணவிகள். கவுரவ விரிவுரையாளர்கள் உட்பட 20 பேர் பணிபுரிகின்றனர். 2011-12ம் கல்வியாண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்தது. 2012-13 கல்வியாண்டிற்கு இட வசதியின்றி எதிரே உள்ள டேனிஷ் மிஷன் பள்ளியில் இடம் ஒதுக்கீடு செய்து வகுப்புகள் நடக்கின்றன. இடப்பற்றாக்குறையால் ஷிப்ட் முறையில் கல்லூரி இயங்கி வருகிறது. 11 ஏக்கர் இடம்: கல்லூரி துவங்கிய சில மாதங்களில் சிறுவங்கூர் சமத்துவபுரம் எதிரே 11 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசுக்கு சொந்தமான இடத்தில் அரசு கல்லூரி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. கட்டுமான பணிகளுக்கு 8 கோடி ரூபாய் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதிருப்தி: கடந்த பிப்., மாதம் 12ம் தேதி தமிழக முதல்வர் ஜெ., கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி கட்டுமான பணிக்கு சென்னையில் இருந்து அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் துவங்கவில்லை. முதல்வர் அடிக்கல் நாட்டி 5 மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் துவங்காதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர், எம்.எல்.ஏ., போன்ற மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வசதிகள் இல்லை: தற்காலிகமாக இயங்கும் இடங்களில் லேப் வசதி இல்லாமல் தனியார் கல்லூரிக்கு அழைத்து செல்கின்றனர். குடிநீர், கழிப்பிட வசதிகளும் இல்லை. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் விடுதி உள்ளது. மற்ற பிரிவினருக்கு விடுதி இல்லை. கல்லூரி கட்டுமான பணிகளை விரைவில் துவக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்