உள்ளூர் செய்திகள்

மொபைல் போனிலிருந்து மீண்டு வர உதவும் புத்தகங்கள் தினமலர் நுாலகத்திற்கு வந்த நுரையீரல் டாக்டர் அறிவுரை

பெங்களூரு: “மொபைல் போனுக்கு அடிமையாகி உள்ள, இளம் தலைமுறையினர் அதில் இருந்து மீண்டு வர புத்தகங்களே ஒரே வழி,” என்று தந்தையுடன் கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு வந்த டாக்டர் உமா தேவராஜ் அறிவுரை கூறினார்.பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள 'தினமலர்' அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'கடல் தாமரை புத்தக பூங்கா' நுாலகத்திற்கு, கோரமங்களாவில் வசிக்கும் ராஜாராமன், 80, தனது மகளான டாக்டர் உமா தேவராஜ், 53 என்பவருடன் நேற்று வந்தார்.'சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்', 'கி.மு., - கி.பி., திருமந்திரம்', 'ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்', 'வேங்கடம் முதல் குமரி வரை - 6 பாகம்', 'திருக்குமரனடியார் புராணம்', 'மஹாபாரதம்', 'கதாசாகரம்' உட்பட 35 புத்தகங்களை, நன்கொடையாக வழங்கி மகிழ்ந்தனர். நுாலகத்தில் இருந்த ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களை ஆவலுடன் படித்தனர்.மகிழ்ச்சி தருணம் பின், ராஜாராமன் கூறியதாவது:சென்னை மாநகர போக்குவரத்து துறையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளேன். பெங்களூரு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. சிறுவயதில் இருந்தே புத்தகம், நாளிதழ் படிக்கும் பழக்கம் எனது உண்டு. வீட்டில் நிறைய புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தேன். சென்னையில் இருந்து வந்த போது எடுத்து வந்த புத்தகங்களை, உங்களுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளேன்.இங்கு வந்ததுமே சில நுாலகங்களுக்கு சென்று, புத்தகங்களை நன்கொடையாக தருகிறேன் என்றேன். அவர்கள் கன்னடா புத்தகங்கள் இருந்தால் கொடுங்கள் என்றனர். தற்போது உங்களிடம் கொடுத்து இருப்பதன் மூலம், பெங்களூரில் தமிழ் புத்தகங்களை நன்கொடையாக வழங்கும், எனது ஆசை நிறைவேறிவிட்டது.நாம் படித்த புத்தகங்களை மற்றவர்களும், படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. இங்குள்ள புத்தகங்கள் அருமை. நுாலகத்தை இன்னும் விரிவுபடுத்தினால் கூட நல்லது. மெம்பர்ஷிப்பிற்கும் ஏற்பாடு செய்யுங்கள். தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான, கடல் தாமரை புத்தகத்தை பெற்றது மகிழ்ச்சியான தருணம்.இவ்வாறு அவர் கூறினார்.புத்தகமே வழி உமா தேவராஜ் கூறியதாவது:செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் துறை தலைவராக உள்ளேன். பணி அழுத்தத்திற்கு மத்தியில் நேரம் கிடைக்கும் போது, புத்தகங்களை படிக்கிறேன். தினமும் இரவு துாங்க செல்வதற்கு முன்பு 20 நிமிடங்கள் புத்தகம் படிப்பேன். தற்போது 'தி தெர்ஸ்டே மர்டர் கிளப்' என்ற புத்தகத்தை ஆர்வமாக படித்து வருகிறேன். இங்கு நுாலகம் ஆரம்பிக்கப்பட்டது தெரிந்ததும் அழைத்து செல்லும்படி, அப்பா என்னிடம் தினமும் கூறி வந்தார். வேலை காரணத்தால் வர முடியவில்லை.இன்று (நேற்று) விடுமுறை என்பதால், அப்பாவை காரில் அழைத்து கொண்டு வந்துவிட்டேன். புத்தகங்களை நன்கொடையாக வழங்கியதில் அவருக்கு மகிழ்ச்சி. எனக்கும் இங்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. புத்தகம் படித்தால் நிறைய விஷயம் கற்று கொள்ளலாம். மொபைல் போனுக்கு அடிமையாகி உள்ள, இளம் தலைமுறையினர் அதில் இருந்து மீண்டு வர புத்தகங்களே ஒரே வழி.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்