மின் வாரியத்தில் கள உதவியாளர் பணி; எழுத்து தேர்வு அடிப்படையில் நியமனம் செய்ய கோரிக்கை
மதுரை: மின்வாரிய கள உதவியாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வை ரத்து செய்தல், காலிப்பணியிடங்களை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்தாண்டு தமிழக மின் பகிர்மான கழகத்தில் 1794 கால உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதற்கான எழுத்துத்தேர்வு நவ., 16ல் நடத்தப்பட்டது. தேர்வர்களின் மதிப்பெண், தரவரிசை பட்டியல் அடிப்படையில், சில நாட்களுக்கு முன் ஆன்லைன் சான்றிதழ் சரிப்பார்ப்பு பட்டியலும் வெளியானது. இதையடுத்து, மின்வாரிய கள உதவியாளர் தேர்வில், எட்டு நிமிடத்தில் 30 அடி மின்கம்பம் ஏறுதல், 35 கிலோ எடையை கீழே வைக்காமல் 100 மீட்டர் துாரத்தை கடப்பது உள்ளிட்ட ராணுவத்திற்கு இணையான விதிமுறைகள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.இதனை நீக்க வேண்டும் என தேர்வு எழுதியவர்கள் தரப்பில் தெரிவித்து இருந்தனர். மே 20ல் தலைமைச் செயலகத்தில் மின்துறை அமைச்சர் நிர்மல்குமாரை சந்தித்து பேசினர்.தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது:பத்து நாட்களுக்கு முன் அமைச்சர்கள் நிர்மல் குமார், செங்கோட்டையன் ஆகியோரை சந்தித்து மின்வாரிய கள உதவியாளர் உடற்தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். எழுத்துதேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என அமைச்சர்கள் உறுதி அளித்ததை அடுத்து, நம்பிக்கையுடன் காத்திருந்தோம். இது குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.இது குறித்து மின் வாரிய உயரதிகாரிகளிடம் கேட்டதற்கு, மின்வாரியம் கடனில் உள்ளதால் பணியிடங்களை உயர்த்த வாய்ப்பு இல்லை என்கின்றனர். இத்தேர்விற்காக ஐ.டி.ஐ., எலக்ட்ரீஷியன், ஒயர்மேன் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி தகுதிகளுடன் பத்தாண்டுகளாக காத்திருக்கிறோம். பலர் வயது வரம்பின் எல்லையில் உள்ளனர்.இன்னும் சில நாட்களில் கள உதவியாளர் உடற்தகுதி தேர்வை ரத்து செய்ய கோரி, முதல்வரை சந்திக்கவுள்ளோம். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற ஆயிரக்கணக்கானோர் தலைமைச் செயலகம் செல்கிறோம் என்றனர்.