உள்ளூர் செய்திகள்

மே மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் பணி

பொள்ளாச்சி: கோடை விடுமுறையின் போது, அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் சுழற்சி முறையில் வரவழைக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கோடை விடுமுறையின்போது, மாணவர்கள் நலன் கருதி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசு உத்தரவு உள்ளது.இருப்பினும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், சில தனியார் பள்ளிகளில் தொடர்ந்து சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. அதேநேரம், பணி பாதுகாப்பு கருதி, அரசு பள்ளிகளில் எப்போதும் சிறப்பு வகுப்பு நடத்தப்படாது எனவும், ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் பள்ளிக்கு வரவழைக்கப்படுவர் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால், மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவர். மேலும், பணி பாதுகாப்பு இல்லாத சூழலில், மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க செய்து ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், பெற்றோர்கள் தேவையற்ற கேள்விகளை எழுப்புவர்.அதேபோல, ஆசிரியர்களும், விடுப்பில் சொந்த காரணங்களாக, பல்வேறு பகுதிகளுக்கு சென்று திரும்புவர். இதன் காரணமாகவே, அரசு பள்ளிகளில், கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்துவதில்லை.தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க செய்யும் வகையில், தனியார் பள்ளிகளில், 9ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வகுப்பு முன்னேற இருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. அதிலும், அனைத்து பாடங்களை விரைந்து நடத்தி முடித்து, தொடர் பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்