மாணவர்கள் பதட்டம் அடையாமல் சோதனை செய்யணும்! நீட் தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கு அட்வைஸ்
திருப்பூர்: 'நீட் தேர்வுக்கான சோதனைகள் தேர்வெழுத வருபவர்களை பதட்டம் அடைய, பயம் கொள்ள செய்யும் வகையில் இருக்க கூடாது; விதிகளை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்,' என, 'நீட்' தேர்வு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தின் ஏழு மையங்களில் 'நீட்' தேர்வு இன்று நடக்கிறது. இந்நிலையில், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 'நீட்' தேர்வு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. தேசிய தேர்வுகள் முகமை அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்கள் குறித்து, தேர்வு பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது.'நீட்' தேர்வு எழுத வருவோருக்கு நிறைய அறிவுறுத்தல் இணையதளம், ஹால்டிக்கெட் வாயிலாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதனை முழுமையாக தெரிந்திருந்தாலும், தேர்வு மையம், தேர்வறைக்கு அனுமதிக்கும் முன்பாக வழிகாட்டுதல்களை விளக்க வேண்டும். மூன்று கட்ட சோதனையில் எந்த இடத்திலும் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.தேர்வுக்கான சோதனைகள், தேர்வெழுத வருபவர்களை பதட்டம் அடைய, பயம் கொள்ள செய்யும் வகையில் இருக்க கூடாது; விதிகளை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். காலை 11:00 மணி முதல், 01:30 மணி வரை அனுமதி என்பதால், தாமதமாக வருவோரை எக்காரணம் கொண்டு உள்ளே அனுமதிக்க கூடாது. ஆதார் கார்டு, போட்டோ மறந்து வந்துவிட்டால், குறிப்பிட்ட நேரத்துக்குள் (மதியம், 01:00 மணிக்கு முன்னதாக) அவர்கள் எடுத்து வர அனுமதிக்க வேண்டும்.வரம்புக்கு உட்பட்ட பகுதிகளை தாண்டி பெற்றோர், தேர்வர் உடன் வருபவர்களை அனுமதிக்க கூடாது. தேர்வு முடிந்து வெளியே தேர்வர்கள் வரும் வரை, வழிகாட்டுதல் மற்றும் விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.