தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலை புகழ்பெற்ற ஒன்றாக மாற வேண்டும்
சென்னை: தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலை, உலகின் புகழ்பெற்ற பல்கலைகளில் ஒன்றாக மாற வேண்டும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வீரமணி பேசினார். சென்னையில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலையில், ஜெயம் - 2015 என்ற மூன்று நாள் விழாக்கள் துவங்கின. அதன் துவக்க விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சரும், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலையின் உபவேந்தருமான கே.சி.வீரமணி பேசியதாவது: இந்த பல்கலை, 2013ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கப்பட்டது. அதற்கு முன், இசை கல்லூரியாக மட்டும் இருந்தது. பல்கலையாக மாற்றம் பெற்ற பின், பல்வேறு வளர்ச்சிகளை கண்டிருக்கிறது. நேற்றைய முன்தினம், திருநெல்வேலியில் இசை கல்லூரி அமையுமா? என, சட்டசபையில் கேள்வி எழுப்பினர். அந்த அளவுக்கு, மக்களிடம், இசை குறித்த ஆர்வம் எழுந்துள்ள இந்த சூழலில், இந்த பல்கலை மேலும் மேலும் வளர்ச்சியுற்று, உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உருவாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். குருவை போற்றும்... தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவரும், பின்னணி இசையமைப்பாளருமான சி.தேவா பேசுகையில், "கர்நாடக இசை, பரதம் உள்ளிட்ட செவ்வியல் கலைகளை, கற்றுக்கொடுக்கும் இதுபோன்ற கல்லூரிகளில் படிப்போரிடம்தான், குருவை போற்றும் பாங்கு இருக்கிறது. இது, வேறு எந்த நாட்டிலும் இல்லை, என்றார். திரைப்பட பின்னணி பாடகி, பி.சுசீலா பேசுகையில், "நான், 1950களில், என் இசை பயணத்தின் முதல் அடியை, இந்த கல்லூரி யில் இருந்துதான் துவங்கினேன். அப்போது, முசிறி சுப்ரமணியன் இந்த கல்லூரியின் முதல்வராக இருந்தார். செவ்வியல் கலைகளை, அனைவரும் கற்க வேண்டும். அதுதான், கலைஞர்களுக்கான அடிப்படை" என்றார். நிகழ்ச்சியில், வரவேற்புரை நிகழ்த்திய, பல்கலையின் துணைவேந்தர் வீணை ஈ.காயத்ரி, "இந்த பல்கலையின், திறந்தவெளி அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கும், சோழிங்கநல்லூரில் 25 ஏக்கரில், 50 லட்சத்தில் புதிய பல்கலை கட்ட உதவிய பல்கலை முன்னாள் வேந்தர் ஜெயலலிதாவுக்கு நன்றி" என்றார்.