யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!
இன்று (டிச., 11) மகாகவி பாரதியார் பிறந்த தினம்; இந்த நாளை, இந்திய மொழிகளின் உற்சவம் என்ற மத்திய கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தல் அடிப்படையில், பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை, அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.பாரதியாரின் கவிதைகள் மற்றும் மொழி பெயர்ப்புகளை வாசித்தல், சுற்றுச் சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பாரதியாரின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி கூறியதாவது: மத்திய அரசின் அறிவிப்பு, பொருத்தமானது. பாரதியாருக்கு 10 மொழிகள் வரை தெரிந்திருக்கும் வாய்ப்புண்டு. அவரது பிறந்த நாளில், அவரது கவிதைகளை வாசிப்பது, சுற்றுச் சூழல் செயல்பாட்டில் கவனம் செலுத்துவது போன்ற செயல்பாடுகள், ஆரோக்கியமான விஷயம். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுவது கூடுதல் சிறப்பு. இருப்பினும், அதையும் தாண்டி, இந்நன்னாள், தாய்மொழிக்கான பொன்னாள் என்பதற்கான நினைவூட்டலாக அமைய வேண்டும்.தமிழ் எழுத தெரியவில்லையே!தமிழகத்தில் பிறந்து வளர்ந்து, தமிழையே தாய்மொழியாக கொண்டிருப்பவர்களுக்கு தமிழில் எழுத தெரியவில்லை, என்ற அவலம் தென்படுகிறது. இந்நிலை மாற வேண்டும். குறைந்தபட்சம், தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு தமிழ் எழுதப்படிக்க தெரிய வேண்டும். பாரதி, இன்றைய &'2கே&' கிட்ஸ்க்கும் பொருந்தக் கூடியவர். யாம் அறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தான் பாடினார்.தாய்மொழியை பிழையின்றி எழுதவும், பேசவும் கற்றுக் கொள்வற்கான, சரி செய்து கொள்வதற்கான நாளாக இதைப் பார்க்க வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சேரும் போது, சமூகம் இன்னும் மகத்துவம் பெறும்.தமிழும் இயற்கையும் இணைந்தே பயணித்துள்ளது. பாரதியாரின் படைப்புகளை மீண்டும் படித்து புத்துணர்வும், உத்வேகமும் பெற வேண்டும். நிறைய மக்கள் பாரதியின் கவிதைகளை மட்டுமே படிக்கின்றனர். அவர், கதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றையும் எழுதியுள்ளார்; அவற்றையும் தமிழ் உலகம் படிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.