தேசிய இளம் விஞ்ஞானி விருது: காரைக்குடி சிக்ரி விஞ்ஞானி தேர்வு
சி.எஸ்.ஐ.ஆர்., (கவுன்சில் ஆப் சயின்டிபிக் அன்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச்) சார்பில் இந்தியா முழுவதும் 40 தேசிய ஆராய்ச்சிமையங்கள் உள்ளன. இதன் சார்பில் தேசிய அளவிலான இளம் விஞ்ஞானி விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது, காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தின் (சிக்ரி) சென்னை மையத்தில் பணிபுரியும் சந்தோஷ்குமார் டி பட் என்ற விஞ்ஞானிக்கு, வேதி அறிவியல் பிரிவுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும், இந்த விருது காரைக்குடி சிக்ரியை சேர்ந்தவருக்கே, வழங்கப்பட்டது. சந்தோஷ்முமார் டி பட், புனே தேசிய வேதியியல் ஆய்வகத்தில், திட்ட விஞ்ஞான உதவியாளராகவும், பாலிமர் அறிவியல் மையத்தில் திட்ட விஞ்ஞான சார்பு உதவியாளராகவும் பணிபுரிந்துள்ளார். கடந்த 2007ல் விஞ்ஞானிக்கான துரித பணியமர்த்துதல் முறையில், சென்னை சிக்ரி மையத்தில் பணியமர்த்தப்பட்ட இவர், 2009ல் விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டார். இந்த கால கட்டத்தில், கரிமம் இல்லா ஹைட்ரஜன் உருவாக்குதல், பாலிமெரிலான மின்கல பெட்டிகளையும், நேரடி மெத்தனால் எரிபொருள் கொண்ட மின்கல பெட்டிகளையும் உருவாக்கினார். இவரின் ஆய்வான காற்று திரவத்தன்மை ஏற்படுத்தும் முறையை கண்டுபிடித்தமைக்கு காப்புரிமை வழங்கப்பட்டது. இவர் தமது முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டய படிப்புகளை, கர்நாடகா பல்கலை கழகம், தார்வார் என்ற ஊரில் செய்தார்.