அதிக ரத்தம் சேகரித்து அரசு மருத்துவமனைக்கு வழங்கி மாணவர்கள் சாதனை
மதுரை: மதுரை மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.,) மூலம் முகாம்கள் நடத்தி ஒரே நாளில் 200 யூனிட் ரத்தம் சேகரித்து, அரசு மருத்துவமனைக்கு வழங்கி, மாணவர்கள் சாதனை புரிந்தனர். 2014-15 கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் என்.எஸ்.எஸ்., சார்பில் சிறப்பு ரத்ததானம் முகாம் நடத்த, பள்ளி கல்வி இணை இயக்குனர் (என்.எஸ்.எஸ்., திட்டம்) உஷாராணி உத்தரவிட்டார். இதன்படி மதுரை சவுராஷ்டிரா ஆண்கள் பள்ளி, திருமங்கலம் பி.கே.என். பெண்கள் பள்ளி, உசிலம்பட்டி அரசு பள்ளி, கருமாத்துார் புனித கிளாரட் மற்றும் மீனாட்சி மெட்ரிக் பள்ளிகளில், ஒரே நாளில் 5 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. பழைய மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரிடம் 200 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமையில் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ஒப்படைக்கப்பட்டது. என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் ஜெயசந்திரன், ஜேம்ஸ் டேவிட் கூறுகையில், "ஒரேநாளில் நடந்த மெகா ரத்த தான முகாம்கள் மூலம் முதன்முதலில் அதிக அளவில் ரத்தம் சேகரிக்கப்பட்டு, தென் மாவட்டங்களில் மதுரை முதலிடம் பெற்றுள்ளது. இதன் முழுவிவர அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். சமூக சேவையில் ரத்த தானம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மெகா முகாம்கள் நடத்தி அதிக யூனிட் ரத்தம் தானம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.