தேர்வு முறைகேடு வழக்கு சமூக நல விடுதி வார்டன் கைது
கலபுரகி: முதல்நிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடந்த தேர்வு முறைகேட்டில், சமூக நலத்துறை விடுதி வார்டன் கைது செய்யப்பட்டு உள்ளார்.கல்யாண கர்நாடகா வளர்ச்சி வாரியத்தில் காலியாக இருந்த, முதல்நிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு நவம்பரில் தேர்வு நடந்தது. கலபுரகியில் ஒரு கல்லுாரியில் அமைக்கப்பட்டிருந்த, தேர்வு மையத்தில் புளூடூத் பயன்படுத்தி, தேர்வு எழுதிய இருவர் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கில் தொடர்புடைய, சமாஜ்வாதி பிரமுகர் ஆர்.டி.பாட்டீலுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. மஹாராஷ்டிராவில் பதுங்கிய அவர் கைது செய்யப்பட்டார்.கல்லுாரியின் முதல்வர் உட்பட, மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வழக்கு சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.இந்நிலையில் தேர்வு முறைகேட்டில் கலபுரகியை சேர்ந்தவரும், சிக்கபல்லாப்பூரில் சமூக நலத்துறை விடுதியில், வார்டனாக வேலை செய்து வருபவருமான, பசவராஜ், 37 என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கலபுரகிக்கு அழைத்து வந்து, அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.