தனியார் காடுகளை விலைக்கு வாங்கிய வனத்துறை: இந்தியாவில் முதன் முறை
கம்பம்: தேனி மாவட்டம் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் உள்ள தனியார் பட்டா காடுகள் 30.41 ஏக்கரை வனத்துறை ரூ.2.33 கோடிக்கு விலைக்கு வாங்கியது. இந்தியாவில் மாநில அரசு இது போன்று வாங்குவது இது முதல் முறை என வனத்துறையினர் தெரிவித்தனர்.தமிழகத்தின் ஐந்தாவது புலிகள் காப்பகமாக 2021ல் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் 51 வது புலிகள் காப்பகமாகவும் உள்ளது. இங்கு மேகமலை பகுதியில் கண்டமனூர், எரசக்கநாயக்கனூர், சாப்டூர் ஜமீன்களுக்கு சொந்தமான நிலங்கள் பட்டா காடுகளாகவும், அதில் தனியார் ஏலக்காய் காபி சாகுபடி செய்கின்றனர். இந்த நிலங்களுக்கு செல்ல பாதை வசதி இல்லாதது, தொழிலாளர் பிரச்னை, வன உயிரினங்களின் நடமாட்டம் போன்ற காரணங்களால் பலர் காடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.ஹைவேவிஸ் மலைப்பகுதியில் ஏகன் ஜகா பகுதியில் அடர் வனப்பகுதிக்குள் இருந்த 30.41 ஏக்கர் தனியார் பட்டா காடுகளை, வனத்துறை அதிகாரிகள் நில உரிமையாளர்களிடம் பேசி விலைக்கு வாங்கி உள்ளனர். 7 பேரிடம் இருந்து இந்த பட்டா காடுகள் ரூ.2.33 கோடிக்கு வனத்துறை விலைக்கு வாங்கி வனத்துடன் சேர்க்கப்பட்டது.இந்தியாவிலேயே வர்த்தகமில்லாத பயன்பாட்டிற்காக, வனப்பகுதியில் புலிகள் காப்பகத்திற்கென மாநில அரசு தனியாரிடம் நிலம் விலைக்கு வாங்குவது இதுவே முதன் முறை என வனத்துறையினர் தெரிவித்தனர். இதற்கான பத்திரப் பதிவு செய்யப்பட்டு கலெக்டர் ஷஜீவனா, புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த் அதிக அக்கறை செலுத்தி செயல்பட்டு வன பகுதியை அதிகரித்துள்ளனர்.