மாணவர்களை தேனீக்கள் கொட்டியதால் தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு
மல்லசமுத்திரம்: வையப்பமலை அரசு பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த மாணவர்களை தேனீக்கள் கொட்டியதால், 15 நிமிடம் கூடுதலாக தேர்வு எழுத நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டது.மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று பத்தாம் வகுப்பு கணித தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத, காலை, 9:30 மணிக்கு, 300 மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். இந்நிலையில், பள்ளியின் தண்ணீர் தொட்டி அருகே உள்ள மரத்தில் தேன் கூடு ஒன்று இருந்தது. பள்ளி சுற்றுச்சுவருக்கு வெளியே நின்றிருந்த மர்மநபர்கள், தேன் கூட்டின் மீது கல்லை வீசியுள்ளனர். இதனால், கூட்டிலிருந்து வெளியேறிய தேனீக்கள், மாணவர்கள், ஆசிரியர்களை துரத்தி துரத்தி கடித்தது.இதில், 4 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கமும், 11 மாணவர்களுக்கு லேசான காயமும், பள்ளி துப்புரவு பணியாளர் ஒருவருக்கு, அதிக காயமும் ஏற்பட்டது. அவர்களை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மாவட்ட கல்வி அதிகாரி விஜயன், மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின், தேர்வு எழுத, 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டதால், மாணவர்கள் தேர்வை எழுதி சென்றனர். இதனால் பரபரப்பு நிலவியது.