மகப்பேறு அறுவை சிகிச்சை அதிகரிப்பு: சென்னை ஐ.ஐ.டி.,
சென்னை: தமிழகத்தில் மகப்பேறுக்கான அறுவை சிகிச்சை அதிகரித்துள்ளதால், அதனை குறைக்க முயற்சிக்க வேண்டும் என, ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆராய்ச்சியாளர்கள் வர்ஷினி நீதிமோகன், டாக்டர்கள் சிரிஷா, கிரிஜா வைத்தியநாதன், பேராசிரியர் முரளிதரன் ஆகியோர் இடம் பெற்ற, மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்கள், மகப்பேறு சிகிச்சை முறை குறித்து ஆய்வு நடத்தினர்.தமிழகம் மற்றும் சத்தீஸ்கரில், இந்த விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. சத்தீஸ்கரில், கர்ப்பகால சிக்கல்கள், அதிக ஆபத்துஉள்ள கருவுறுதல் நிகழ்வுகள் அதிகமாக பதிவாகியுள்ளன. அங்கு மகப்பேறு மருத்துவர் பணியிடங்கள், 77 சதவீதம் காலியாக உள்ளன.தமிழகத்தில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளன. அரசு மருத்துவமனைகளை ஒப்பிட்டால், தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.கடந்த, 2021 வரையிலான, 5 ஆண்டுகளில், நாடு முழுதும், மகப்பேறு அறுவை சிகிச்சை எண்ணிக்கை, 17.2 சதவீதத்தில் இருந்து, 21.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. 35 முதல், 49 வயது வரையிலான பெண்களுக்கு, அறுவை சிகிச்சை பிரசவம் அதிகமாக நடந்துள்ளது. அதிக எடை உடைய பெண்களும் அதிக அளவில் அறுவை சிகிச்சை செய்துஉள்ளனர்.பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம், 3 சதவீதத்தில் இருந்து, 18.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில், அதிக அளவில் அறுவை சிகிச்சையில் தான் குழந்தைகள் பிறந்துள்ளன.நகர்ப்புறங்களில் உள்ள, நல்ல கல்வியறிவு மிக்க பெண்கள், அறுவை சிகிச்சை செய்வதையே விரும்பியுள்ளனர். அதற்கான வசதிகளுடன் மருத்துவமனைகள் உள்ளதால், இந்த முடிவை எடுப்பதாக தெரிகிறது. மேலும், சுய விருப்பம், சமூக, பொருளாதாரத்தில் உயர்ந்த நிலை போன்றவையும், இதற்கு காரணமாகும்.அரசு மருத்துவமனைகளில், போதிய உள்கட்டமைப்பு வசதியின்மையும், தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. மகப்பேறுக்கான அறுவை சிகிச்சையை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலங்களில், அறுவை சிகிச்சை அதிகரிப்பது பொருத்தமானதாக இருக்கலாம்.தமிழகத்தில் ஏழை பெண்கள், மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வது ஆபத்தான அளவை எட்டியுள்ளது.இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் மருத்துவ ரீதியாக அவசியம் இல்லாத நிலையில் அதிகரித்துள்ளன. இதனை மருத்துவத்துறை பகுப்பாய்வு செய்து, சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.