பாதுகாப்பும் இல்லை; பரிவும் இல்லை: தேர்தல் பணி ஆசிரியர்களின் பரிதாபம்
மதுரை: தமிழகத்தில் ஏப்., 19ல் நடந்த லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்காக 68,321 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இவற்றில், 3 லட்சத்து 32,233 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்களே.எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், இந்த தேர்தலில் பல்வேறு இன்னல்களை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சந்தித்துள்ளனர். இதற்கு பிரதான காரணம், ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணி, மாவட்ட வாரியாக தேர்தல் பணிக்கு ஒதுக்கிய நிதி சரிவர செலவிடப்படவில்லை என, பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பாதுகாப்பு கேள்விக்குறிதமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் சீனிவாசன், தமிழக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்க பொதுச்செயலர் ராபர்ட் கூறியதாவது:ஓட்டுப்பதிவுக்கு முன்பே ஓட்டுச்சாவடிகளில் உரிய வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தின. தேர்தல் கமிஷன் ஒதுக்கிய, 8.88 கோடி ரூபாய் நிதியை குறிப்பிட்டு, மதுரை உள்ளிட்ட கலெக்டர்களுக்கு மனுக்கள் அளித்தோம்.பெரும்பாலான மாவட்டங்களில் கண்டுகொள்ளவில்லை. மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு தேர்தல் பணியில் விலக்கு கேட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கும் கண்டிப்புடன் மறுக்கப்பட்டன.ஓட்டுப்பதிவு நாளில் ஓட்டுச்சாவடிகளில் பணியில் இருந்தவர்களுக்கு, போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை. அதன் பின் வீடு திரும்பும் போது வாகன வசதி, பாதுகாப்பு கேள்விக்குறியானது.இதனால், மன உளைச்சல், உடல் சோர்வுடன் வீடு திரும்பிய தருமபுரி காமலாபுரம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் கணேசன் நெஞ்சு வலியால் இறந்தார்.ஆசிரியர் செல்வராஜ், சேலம் ஆத்துார் ஒன்றிய ஆசிரியை சில்வியா கேத்தரின் அனிதா, அவரது கணவர் ஜான் பிரகாஷ் ஆகியோர் சாலை விபத்துகளில் சிக்கினர். ஆசிரியை சிகிச்சையில் உள்ளார். மற்ற இருவர் உயிரிழந்தனர்.நான்கு பேர் பலிநாமக்கல் ராசிபுரம் ஒன்றியம் ஜெயபாலன் தேர்தல் பயிற்சிக்கு சென்றபோது விபத்தில் பலியானார். மொத்தம் நான்கு பேர் உயிரிழந்தனர்.இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. வருங்காலங்களில் ஓட்டுப்பதிவு முடிந்து இரவுக்கு பின் வீடு திரும்பும் ஆசிரியைகளுக்கு மாவட்ட நிர்வாகம் வாகன வசதி செய்து தர வேண்டும்.உணவு, பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். ஓட்டுப்பதிவுக்கு முன் ஆசிரியர்களின் பிரச்னைகளை கேட்டு அதை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.