அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கேன்வாஸ் பணியில் ஆசிரியர்கள்
பொள்ளாச்சி: அரசு பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், கேன்வாஸ் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி, நகராட்சிப்பள்ளி, அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அவ்வகையில், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளில், 5 வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இது தவிர, பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப்பகுதிகளில், அனைத்து 5 வயதுடைய குழந்தைகள் ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையில், அவர்களையும் பள்ளியில் சேர்ப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்கின்றனர்.உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், அருகே உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்றும், கேன்வாஸ் செய்தும் வருகின்றனர்.பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, மே மாதம், துவக்கப்பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி விபரம் வெளியிடப்படும். அதன் வாயிலாக, அருகே உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உறுதிப்படுத்தப்படும்.அதனால், மாணவர்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் சலுகைகள், பள்ளியின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைக்கப்படுகிறது. பள்ளிகளில், விளம்பர பலகை தயார்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.