படிப்புடன் தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்க! ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு அறிவுரை
பல்லடம்: மாணவர்கள், படிப்பு மட்டுமன்றி தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என, அல்லாளபுரம் அரசு பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில், 63வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். பி.டி.ஏ., தலைவர்அருணாசலம், பொங்கலுார் வட்டார கல்வி அலுவலர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள் அனுசியா தேவி, வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பல்லடம் வட்டார கல்வி அலுவலர் விஸ்வநாதன் பேசுகையில், “எங்களது காலத்தில், நாங்கள் படிக்கும் போது நோட்டுப் புத்தகங்கள் மட்டுமன்றி ஒரு வாய்ப்பாடு, வாங்குவதற்கு உண்டான சூழல் கூட இருக்காது. அந்த அளவுக்கு மிகவும் சிரமப்பட்டு தான் படித்தோம்.ஆனால், இன்று, மாணவர்களாகிய உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கிறது. படிப்பு மட்டுமன்றி, உங்களது தகுதிகளை வளர்த்து கொள்வதற்கு தேவையான அனைத்தையும், பெற்றோர் உட்பட, தன்னார்வலர்கள், தொழில்துறையினர் மற்றும் தமிழக அரசு சார்பிலும் வழங்கப்படுகிறது. எனவே, கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு, ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும்,” என்றார்.விழாவை முன்னிட்டு, மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், அதனையடுத்து, பரிசளிப்பு விழாவும் நடந்தது. முன்னாள் ஆசிரியர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.