ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு டாக்டர் பட்டம்
எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக துணைவேந்தர் சத்தியநாராயணன் கூறியதாவது: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவிற்கு தங்கம் பெற்றுத்தந்த அபினவ் பிந்த்ராவிற்கு, எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தின் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. காட்டாங்குளத்தூரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில், செப்டம்பர் 7ம் தேதி நடைபெறவுள்ள நான்காவது பட்டமளிப்பு விழாவில், அபினவ் பிந்த்ராவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும். பட்டமளிப்பு விழா உரையாற்றவுள்ள கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, அபினவ் பிந்த்ராவிற்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குவார். ‘இஸ்ரோ’ தலைவர் மாதவன் நாயருக்கும், நான்காவது பட்டமளிப்பு விழாவின் போது, கவுரவ டாக்டர் பட்டம் (டி.எஸ்சி.,) வழங்கப்படுகிறது. இவ்வாறு சத்தியநாராயணன் கூறினார்.