மாணவர்களின் கல்வி கடனுக்கு அரசே வட்டி செலுத்த திட்டம்
இதேபோன்ற சலுகை மற்ற மாநிலங்களிலும் அமலாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.கர்நாடக மாநில அமைச்சரவை கூட்டம், சமீபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் சுபோதா கரந்த்லாஜே கூறியதாவது:வங்கிகள் அதிக வட்டியில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குகின்றன. ஆனால், மாநில அரசின் திட்டப்படி, உயர் கல்வி பயில கல்வி கடன் பெறும் மாணவர்கள், தாங்கள் பெறும் கடனுக்கு 6 சதவீத வட்டி செலுத்தினால் போதும். மீதமுள்ள வட்டித் தொகையை மாநில அரசு செலுத்தி விடும்.நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் முதல் தேதிக்கு பிறகு, கல்வி கடன் பெறும் மாணவர்கள் இந்தச் சலுகையைப் பெறலாம். பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேலான படிப்புகளுக்கு கல்வி கடன் பெறுவோருக்கு இச்சலுகை கிடைக்கும். இந்தத் திட்டத்தில் மாணவர்கள் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். இவ்வாறு அமைச்சர் கரந்த்லாஜே கூறினார்.