அரசு பள்ளிகளில் இன்டர்நெட்: தமிழக அரசு நடவடிக்கை
சென்னை: அனைத்து அரசு பள்ளிகளிலும், இணையதள வசதி ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்க, 519.73 கோடி ரூபாயில், 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்; 455.32 கோடி ரூபாயில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.ஏற்கனவே 6,023 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில், 5 மற்றும் 6 Mbps இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு, மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர். இன்டர்நெட் வேகம் போதுமானதாக இல்லை என்பதால், அதன் வேகத்தை 100 Mbps என்ற அளவில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன் இணைந்து, இணையதள வசதியை ஏற்படுத்தி வருகிறது. மொத்தம் உள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், இதுவரை 5,907 பள்ளிகளில், 100 Mbps வேகம் கொண்ட, இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல், 6,992 நடுநிலை பள்ளிகளில், 3,267 பள்ளிகளில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடக்க பள்ளிகளை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 24,338 பள்ளிகளில், 8,711 பள்ளிகளில், இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 19,668 அரசு பள்ளிகளில், இம்மாத இறுதிக்குள் இப்பணி முடிவடையும்.