கல்வி கட்டணம் அறிவிப்பு முக்கியம் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு
பெங்களூரு: பள்ளி கல்விக் கட்டணம் தொடர்பான விபரங்களை, அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்' என, தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகளைத் திறக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அரசு நிதியுதவி பெறாத, தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை துவக்கியுள்ளன. கல்விக் கட்டணம் 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஒரே தவணையில் கட்டணம் செலுத்தும்படி, பெற்றோருக்கு நெருக்கடி கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, கல்வித்துறையிடம் புகார் அளித்தனர்.ஒவ்வொரு ஆண்டும், தனியார் பள்ளிகள் மனம் போனபடி கட்டணம் வசூலிக்கின்றன. இதற்கு கடிவாளம் போட வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.இதுதொடர்பாக, பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை:அரசு நிதியுதவி பெறாத தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது.மாணவர்களை சேர்க்கும்போது, கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தொகையை வசூலிக்க வேண்டும். கல்விக் கட்டணம் உட்பட, மற்ற கட்டணம் குறித்து, அறிவிப்புப் பலகையிலும், அந்தந்த பள்ளிகளின் இணைய தளத்திலும் வெளியிட வேண்டும். இதனால் அந்தந்த பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்து, பெற்றோர் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.மாணவர்களின் சேர்க்கை விஷயத்தில், விதிகளை பின்பற்றுவது கட்டாயம். பள்ளிகள் மீது, விதிகளை மீறியதாக புகார் வந்தால், அந்தந்த பகுதியின் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.