உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள்: கவர்னர் ரவி கவலை

சென்னை: தமிழகத்தில் ஹெராயின், கொக்கைன் போன்ற போதைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகின்றனர், என கவர்னர் ரவி கூறியுள்ளார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது: போதைப்பொருள் எதிர்கால தலைமுறைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதை பற்றி இங்கு நாம் பேசி வருகிறோம். தனி நபர் மற்றும் குடும்பத்தை மட்டுமல்லாமல் சமூகம் மற்றும் ஒரு மாநிலத்தையே போதைப்பொருள் சிதைத்து விடுகிறது. ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் விவசாயம் முதன்மையாக இருந்தது. ஆனால், இன்று போதைப்பொருட்களால் நிலைமை மாறி உள்ளது. சிறப்பாக இருந்த பஞ்சாப் மாநிலமும் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் கஞ்சா தடை செய்யப்பட்டு இருந்தாலும் விற்பனை தடையின்றி நடைபெறுகிறது. ஹெராயின், கொக்கைன் போன்ற போதைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகின்றனர். பல பில்லியன் கணக்கில் பணம் சம்பாதிக்கும் தொழிலாக போதைப்பொருள் விற்பனை உள்ளது.தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதற்கான சிண்டிகேட் உள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடல் வழியே கடத்தி வரப்படும் போதைப்பொருட்கள் மெட்ரிக் டன் கணக்கில் பறிமுதல் செய்யப்படுகின்றன. போதைப்பொருளால் வரும் பணத்தால் தான் ஆப்கானிஸ்தான் பொருளாதாரமே உள்ளது. இதனால், இப்பிரச்னையை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.இது மிகப்பெரிய பிரச்னை. நாம் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் வெளியேற்ற வேண்டும். போதைப்பொருட்களுக்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகின்றனர். இது குறித்து நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்