உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் தோட்டம் வளர்த்து மாணவர்கள், ஆசிரியர்கள் அசத்தல்

சிக்கபல்லாப்பூர்: சிக்கபல்லாப்பூர் மாவட்டம், பாகேபள்ளி தாலுகா, மார்கானுகுண்டே கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள, 60க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், இந்த பள்ளிக்கு நடந்து வந்து படிக்கின்றனர்.இந்த பள்ளி, 1983ல் ஆரம்பமானது. 13 வகுப்பறைகள் கொண்டுள்ளன. ஆரம்பத்தில், 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இருந்தனர். தற்போது, 8, 9, 10ம் வகுப்புகளில் மொத்தமாக 142 மாணவர்கள் படிக்கின்றனர்.பள்ளி வளாகத்தில் ஆழ்துளைக்கிணறு உள்ளது. இந்த நீரை பயன்படுத்தி வளாகத்தில் உள்ள காலி இடத்தில் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், செடி, கொடிகள் நட்டு பராமரிக்கின்றனர். இயற்கையின் அவசியம் குறித்து, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஊக்கப்படுத்துகின்றனர்.நுழைவு பகுதியில், பூந்தோட்டம் உள்ளது. சாமந்தி, ரோஜா உள்ளிட்ட வகை வகையான பூ செடிகள் வளர்க்கப்படுகின்றன. தவிர பள்ளியை சுற்றி முக்கனிகளான மா, பலா, வாழை மரங்கள் மட்டுமின்றி, சில்வர் ஓக், அசோகா புஷ், கசகசா, வேப்ப மரங்களும் உள்ளன.மேலும், பீன்ஸ், கேரட், முள்ளங்கி, கத்தரி, முருங்கை போன்ற காய்களும்; கொத்தமல்லி, கருவேப்பிலை, பருப்பு கீரை, தண்டு கீரை, பால் கீரை போன்ற கீரை வகைகளும் வளர்த்து, தோட்டம் பராமரிக்கின்றனர்.மதிய உணவு இடைவேளையின்போது, அமருவதற்காக ஆங்காங்கே சிமென்ட் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இயற்கையின் சூழலில் அமர்ந்து கொண்டு, மாணவர்கள், ஆசிரியர்கள் உணவு சாப்பிடுகின்றனர். துாய்மையான காற்றும் கிடைக்கிறது.மாலையில் பள்ளி முடிந்ததும், மாணவர்கள் தோட்டங்களுக்கு தண்ணீர் ஊற்றி, தேவைப்படும்போது உரம் போட்டு, வீட்டுக்குச் செல்கின்றனர். உதிர்ந்த இலைகளை பயன்படுத்தி, இயற்கை முறையில் உணவு தயாரிப்பது சிறப்பு.இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் கூறியதாவது:சுற்றுச்சூழல் பராமரிப்பதன் அவசியம் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம். எனவே காலியாக இருக்கும் இடத்தில், மரம், செடி, கொடிகளை, மாணவர்களால் நடப்பட்டு, பராமரிக்கப்படுகின்றனர்.ஒவ்வொரு மரத்தின் மருத்துவ குணம் பற்றியும் அவர்களுக்கு விளக்கப்படுகின்றனர். பாட புத்தகங்களில் வரும் சந்தேகங்களுக்கு, குறிப்பிட்ட மரங்களை காண்பித்து, நேர்முக விளக்கம் அளித்து, அதன் பயன்களையும் விளக்கப்படுகிது.இப்படி செய்வதால், மாணவர்களுக்கு சுலபமாக புரிகிறது. சுற்றுச்சூழல் ஏன் முக்கியம் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், மாணவர்கள் அதை புரிந்து கொண்டு செயல்படுகின்றனர். சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது செய்ய விரும்பியதன் பலனாக, ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து தங்களால் முடிந்த அளவுக்கு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்