பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாநில அரசு ஆலோசனை
விக்ரம்நகர்: டில்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.நகரின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையிலேயே நீடித்து வருகிறது. இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது:காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையிலேயே நீடிக்கிறது. காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் நாளை (இன்று) நிலைமை மாறக்கூடும். ஒருவேளை நிலைமை மோசமானால் இரண்டாம்கட்ட நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தும்.குழந்தைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு முக்கியமானது என்பதால், கடந்த ஆண்டைப்போலவே கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அரசு தயங்காது. சூழ்நிலையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.காற்றின் தரம் மேலும் மோசமடைந்தால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மாசுபாட்டைக் குறைப்பதற்கான அனைத்து பிரசாரங்களையும் நடவடிக்கைகளையும் வலுப்படுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.