குடியரசு தின அண்ணா பதக்கம்; தகுதியானவர்களை பரிந்துரைக்கலாம்
கோவை: அண்ணா பதக்கத்துக்கான தகுதியான நபர்களின் பெயர்களை பரிந்துரைக்க பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று அண்ணா பதக்கம் தமிழக முதல்வரால் வழங்கப்படும். உயிர், உடமைகளை காப்பாற்றுவதில் துணிச்சலாக செயல்கள் புரிந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.தலா மூன்று அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என, ஆறு பேருக்கு விருது வழங்கப்படும். பதக்கம் மற்றும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.வரும், 2025ம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான நபர்களை பரிந்துரைக்க அனைத்து அரசு அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து விருதை பெற தகுதியுடைய நபர்களின் பெயர்களை பரிந்துரைக்க அனைத்து கல்லுாரிகளுக்கும் பாரதியார் பல்கலை அறிவுறுத்தியுள்ளது. தகுதியான நபர்கள் குறித்த தகவல்கள், அதற்கான ஆவணங்களை இணைத்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும், டிச., 9 ம் தேதிக்குள் ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான வழிகாட்டுதல்கள், விபரங்கள் பல்கலை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் இடையே இத்தகவலை தெரிவித்து தகுதியான நபரை தேர்ந்தெடுத்து அனுப்ப அறிவுறுத்தியுள்ளது.