மாநகராட்சி பள்ளிகளில் அத்துமீறல்; காவலர் நியமிக்க வேண்டுகோள்
கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பல பள்ளிகளில் பகல் நேரக் காவலர்கள் இல்லாததால், விடுமுறை நாட்களில் பள்ளி வளாகங்கள் கண்காணிக்கப்படாமல் இருக்கின்றன.இதை சாதகமாக பயன்படுத்தி, சில மாணவர்கள் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில், பள்ளிக்குள் நுழைந்து விளையாட்டு மைதானத்தை பயன்படுத்துகின்றனர்.கழிவறைக்குள் சென்று புகைபிடிப்பதாகவும், கூல் லிப், போதைப்பொருள் போன்றவற்றை பயன்படுத்துவதாகவும், சில பள்ளிகளில் இரவு நேர காவலர்கள் கேட்டை பூட்டிச் சென்றாலும், ஆசிரியர்களின் வேண்டுகோளுக்காக மீண்டும் திறந்து விடுவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி, பகல் நேரக் காவலர்கள் நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, ''போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக, மாணவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. காவல்துறையும் இந்நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாணவர்களிடம் இருந்து போதைப்பழக்கத்தை ஒழிப்பதில், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் பங்களிப்பு அவசியம். புகார் எழுந்துள்ள பள்ளிகளில் தனி கவனம் செலுத்தப்படும்,'' என்றார்.