அரசு வேலை, பள்ளிக்கு அங்கீகாரம் வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பொதுப்பணித்துறையில் வேலை, குழந்தைகள் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் வாங்கி தருவதாக இருவரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த ஜவுளி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் ரவுண்ட்ரோடை சேர்ந்தவர் முகமது மர்ஜித், 26. இன்ஜினியரிங் படித்து விட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். சென்னை சீதக்காதி நகரை சேர்ந்த ஜவுளி வியாபாரி முகமதுசகாப்தின் 58, அடிக்கடி திண்டுக்கல்லுக்கு ஜவுளி வியாபாரத்திற்காக வந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முகமதுசகாப்தின் தனக்கு அரசு அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. பணம் கொடுத்தால் பொதுப்பணித்துறையில் பொறியாளர் பணி வாங்கி தருகிறேன் என கூறினார்.இதை நம்பிய முகமது மர்ஜித் ரூ.2.50 லட்சத்தை கொடுத்தார்.இதேபோல் திண்டுக்கல்லில் குழந்தைகள் பள்ளி நடத்தும் ரவுண்ட்ரோடை சேர்ந்த ரபீக்கிடம் 35, பள்ளிக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ.3.50 லட்சம் பெற்றார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இருவரும் முகமது சகாப்தினிடம் பணத்தை கேட்டனர்.அவர் காலம் தாழ்த்தி வந்த நிலையில் திண்டுக்கல் வந்த முகமது சகாப்தினை, பணம் கொடுத்து ஏமாந்த முகமது மர்ஜித், ரபீக் இருவரும் பிடித்து திண்டுக்கல் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் முகமது சகாப்தினை கைது செய்தனர்.