பொறியியல் படிப்பிற்கு இன்று ரேங்க் பட்டியல் வெளியீடு
பொறியியல் படிப்புகளில் சேர, ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 353 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, கடந்த 20ம் தேதி, ரேண்டம் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதையடுத்து, கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களில் எடுத்த மொத்த மதிப்பெண்கள், 200க்கு கணக்கிட்டு, கட்-ஆப் மார்க் தயாரிக்கப்பட்டுள்ளது. கணிதப் பாடத்தில் எடுக்கும் மதிப்பெண்கள் 100க்கும், இதர இரு பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்கள் தலா 50 மதிப்பெண்களுக்கும் கணக்கிடப்பட்டு, மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு, கட்-ஆப் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, தயாரிக்கப்பட்டுள்ள, ரேங்க் பட்டியல், இன்று காலை அண்ணா பல்கலையில் வெளியிடப்படுகிறது. விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும், அண்ணா பல்கலை இணையதளத்தில், ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. எனவே, மாணவர்கள் அனைவரும், தங்களுடைய, கட்-ஆப் மதிப்பெண் விவரங்களை இன்று தெரிந்து கொள்ளலாம். இதைத்தொடர்ந்து, தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், ஜூலை முதல் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரையும், பொதுப்பிரிவு கவுன்சிலிங், எட்டாம் தேதியிலிருந்தும் நடைபெற உள்ளன. அண்ணா பல்கலை வளாகத்தில், 35 நாட்கள் வரை, கவுன்சிலிங் நடைபெற உள்ளது. அ ரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும், தனியார் பொறியியல் கல்லூரிகளில், ஒரு லட்சத்து 25 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.