உள்ளூர் செய்திகள்

மங்கள்யான் செயற்கைக்கோளின் நீள்வட்ட பாதை உயரம் அதிகரிப்பு

சென்னை: மங்கள்யான்&' செயற்கைக்கோள், வெற்றிகரமாக, 1.92 லட்சம் கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட, "மங்கள்யான்" செயற்கைக் கோள், தற்போது பூமியை, நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. நீள்வட்ட பாதையின் உயரத்தை அதிகரிக்க, பல கட்டங்களாக பணி நடந்து வருகிறது. நான்காம் கட்டமாக நவ., 11ம் தேதி நடந்த முயற்சியில், குறிப்பிட்ட வேகத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை, "மங்கள்யான்" செயற்கைக்கோள் அடையாததால் ஏமாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், நவ., 12ம் தேதி அதிகாலை, 5:03 மணிக்கு செயற்கைக் கோளில் உள்ள ராக்கெட், 303.8 வினாடிகளுக்கு (5.5 நிமிடம்) இயக்கப்பட்டது. இதில், "மங்கள்யான்" செயற்கைக்கோள் பூமியில் இருந்து, 1,18,642 கி.மீ., உயரத்திலான நீள்வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. நேற்று அதிகாலை, 1:27 மணிக்கு, ஐந்தாம் கட்டமாக, "மங்கள்யான்" செயற்கைக்கோளில் உள்ள ராக்கெட், 243.5 வினாடிகளுக்கு (4.5 நிமிடம்) இயக்கப்பட்டது. இதில், 1,18,642 கி.மீ., உயரத்திலிருந்து, 1,92,874 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. டிசம்பர், 1ம் தேதி முதல், செவ்வாய் கிரகத்திற்கான, தன் முறையான பயணத்தை, "மங்கள்யான்" செயற்கைக்கோள் துவங்கும். 2014, செப்டம்பர், 24ம் தேதி, செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்