ஆசிரியர் கலந்தாய்வு முடிந்த பிறகு விதிகளை மீறிமுறைகேடு!
தேனி: ஆசிரியர் கலந்தாய்வு முடிந்த பிறகு முறைகேடாக 22 நாளில் 21 பேருக்கு இடமாறுதல், பதவி உயர்வு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. தேனி மாவட்ட தொடக்க கல்வி துறையில் ஆசிரியர் பொது கலந்தாய்வு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) அப்துல் ஜபார் தலைமையில், ஆக., 22 முதல் 2 நாட்கள் நடந்தது. இதில் மலைச்சூழற்சி தவிர மற்ற பகுதிகளில் காலியிடம் இல்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆக., 31க்கு பிறகு செப்., 22 வரை விதிகளை மீறி முறைகேடாக 21 ஆசிரியர்களுக்கு பணி மாறுதல், பதவி உயர்வுக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை ஆசிரியர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் கூறுகையில், கெங்குவார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி ஆசிரியர் சோனியாவிற்கு தேனி ஒன்றியம் நாகலாபுரம் நடுநிலைப்பள்ளிக்கு மாறுதல் வழங்கப்பட்டது. அங்கு பணியாற்றிய 3 நாளில் இவர் காட்டுநாயக்கன்பட்டி ஆரம்ப பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். போடி ஒன்றியம், அகமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மலை சுழற்சி முறையில் கடந்த செப்டம்பர் மாதம் ஆசிரியை பிரியாவிற்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இந்த மாறுதலை ரத்து செய்து, பட்டதாரி ஆசிரியர் பணியிடமே இல்லாத பெரியகுளம் 10 ம்பகுதி நகராட்சி பள்ளிக்கு தற்போது மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் தகுதி பட்டியலில் ஆசிரியர் ராம்குமார் என்பவர் பெயர் இடம் பெறவில்லை. இவர் கடந்த மே மாதம் பி.எட்., தேர்வு எழுதி ஜூலையில் தேர்வு முடிவு வந்தது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு முடிந்த பின், இவருக்கு அறிவியல் பட்டதாரி பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அகமலை பள்ளி ஆசிரியை நிர்மலா அருள்ஜோதிக்கு ஒரே ஆண்டில் சிலமலை, தாடிச்சேரி, காட்டுநாயக்கன்பட்டி என 4 மாறுதல் உத்தரவுகள் குறிப்பிட்ட ஒரு சில நாட்களிலேயே வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் 22 நாட்களில் 21 பேருக்கு பணி மாறுதல், பதவி உயர்வு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பணியிடத்திற்கு புதிய அலுவலர் நியமிக்கப்பட்டு, விரைவில் பொறுப்பு ஏற்க உள்ள நிலையில் தற்போதுள்ள அலுவலர் விதிகளை மீறி மாறுதல் உத்தரவு வழங்க வேண்டிய அவசியம் என்ன, என்கின்றனர். இப் பிரச்னை குறித்து ஜே.எஸ்.ஆர்., தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் பரமசாமி கூறுகையில், தேனி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு விதிகளை மீறி, முறைகேடாக மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பணியிடமே இல்லாத பள்ளிகளுக்கு மாறுதல் பெற்று சென்ற ஆசிரியர்கள் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்படும். எனவே, கலந்தாய்விற்கு பின் பிறப்பித்த அனைத்து மாறுதல், பதவி உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும், என்றார்.