தனியார் பள்ளியில் தேர்வு முறைகேடு; ஆசிரியர்கள் இடமாற்றம்
ராமநாதபுரம்: பரமக்குடி தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் சிலர் உதவியதையடுத்து, அவர்கள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தனியார் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு எழுதிய மாணவர் ஒருவருக்கு, அங்கு கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் விடைகளை கூறியுள்ளார். இதுபோன்று, பிளஸ் 2 வேதியியல் தேர்விலும், சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியுள்ளனர். இதுகுறித்த தகவலின்படி, சென்னையில் இருந்து தேர்வுத்துறை இணை இயக்குனர் சரேகா, ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இதனடிப்படையில், அந்த தனியார் பள்ளியில் தேர்வு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.