முதுகலை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப சான்றிதழ் சரிபார்ப்பு
சென்னை: நிலுவையில் உள்ள 294 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, ஜூலை 24ம் தேதி வரை ஒன்பது மையங்களில் நடக்கின்றன. மேலும் தமிழ், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களுக்காக நிலுவையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் - செயலர் வசந்தி தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:கடந்த 2007-08, 2008-09ம் ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,621 முதுகலை ஆசிரியர்களில், தேர்வு செய்யப்பட்டு பணியில் சேராதவர்கள், தகுதியற்றவர்கள் போன்றவர்கள் நீக்கப்பட்டதன் காரணமாக, 294 பணியிடங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களைத் தேர்வு செய்வதற்கான, சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜூலை 24ம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஒன்பது மையங்களில் நடக்கின்றன. இதற்காக 936 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டியலில் சீனியாரிட்டி நபர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. மேலும், ஏற்கனவே பட்டியலில் உள்ள சீனியாரிட்டியை விட அதிக சீனியாரிட்டி உள்ளவர்களின் பட்டியலை, வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குனரகத்திடம் இருந்து பெற்றுள்ளோம். அவர்களுக்குத் தான் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற உள்ளன. இவர்களில் இருந்து 294 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட கல்வித் துறையிடம் ஒப்படைப்போம். மேலும், கடந்த காலங்களில் தமிழ், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களுக்காக நிலுவையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, தகுதி வாய்ந்தவர்களை விரைவில் தேர்வு செய்ய உள்ளோம். இதற்கான பதிவு மூப்பு பட்டியலை, வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குனரகத்திடம் கேட்டுள்ளோம். வந்ததும், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும். இவ்வாறு வசந்தி கூறினார்.