உள்ளூர் செய்திகள்

தூய்மை பள்ளி விருதுகள்: புதுச்சேரி மாநிலம் சாதனை!

இது குறித்து முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: துாய்மை, சுகாதாரம், சுத்தமான குடிநீர் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில், &'தேசிய துாய்மை பள்ளி விருதுகள்&' (ஸ்வச் வித்யாலயா விருதுகள்) வழங்கப்படுகிறது. நடப்பு 2017-18ம் ஆண்டுக்கான விருதுக்கு, 727 பள்ளிகள் போட்டியிட்டன. இதில், 52 பள்ளிகள் மட்டுமே தேசிய அளவிலான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன.   புதுச்சேரி மாவட்டம் 5 விருதுகளை பெற்று, நாட்டிலேயே முதலிடத்தை பெற்றுள்ளது. காரைக்கால் மாவட்டம் 2 விருதுகளை பெற்று, 3ம் இடத்தை பெற்றுள்ளது. மொத்தமாக, புதுச்சேரி மாநிலம் 7 விருதுகள் பெற்று நாட்டில் முதலிடம் பெற்றுள்ளது. கூனிச்சம்பட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி, 100 சதவீத மதிப்பெண் பெற்று, இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.   சேந்தநத்தம் அரசு தொடக்கப் பள்ளி 98.90 சதவீத மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடத்தையும், அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி 97 மதிப்பெண்ணுடன் 8ம் இடத்தையும், எக்கோல் ஆங்கிலேஸ் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் அகலங்கண்ணு அரசு தொடக்கப் பள்ளி ஆகியவை 95.8 சதவீத மதிப்பெண்ணுடன் 11ம் இடத்தையும் பெற்றுள்ளன. சம்பூர்ணா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி 94 சதவீத மதிப்பெண்ணுடன் 18வது இடத்தையும், கோட்டுச்சேரி அரசு தொடக்கப்பள்ளி 92.5 சதவீத மதிப்பெண்ணுடன் 28வது இடத்தையும் பெற்றுள்ளன.   இந்த விருதுகளை, டில்லியில், வரும் 18-ம் தேதி நடக்கும் விழாவில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழங்குகிறார். இவ்விருது பெறும் பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும், சிறந்த பணிக்கான அங்கீகார சான்றிதழும் அளிக்கப்பட உள்ளது. இந்த விருதுகளை பெற சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர் சுகாதார துாதுவர் டில்லிக்கு செல்ல உள்ளனர். நாட்டிலேயே முதலிடம் பிடித்து சாதித்ததற்காக கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், கல்வித் துறை செயலர், இயக்குனர் மற்றும் அதிகாரிகளை பாராட்டுகிறேன். இவ்வாறு, நாராயணசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்