சமச்சீர் கல்வியால் மெட்ரிக் பள்ளிகள் நலன் பாதிக்காது
தமிழ்நாடு மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தின் சிறப்பியல்புகள் குறித்த விளக்கக் கூட்டம் சென்னையை அடுத்த பழஞ்சூரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பன்னாட்டு உறைவிடப் பள்ளியில் நடந்தது. செயின்ட் ஜான்ஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கிஷோர்குமார் வரவேற்றார். சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து விளக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: சமச்சீர் கல்வித் திட்டம் மெட்ரிக் குலேஷன் பள்ளிகளுக்கு எதிரானதல்ல. மெட்ரிக் பள்ளிகள் இரண்டாம் தர மக்கள் என்ற எண்ணமும் அரசுக்கு இல்லை. மாநில திட்டக் குழுவின் மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் நாட்டிலேயே தமிழகம் 3ம் இடத்தை பிடித்துள்ளது. அடிப்படை கல்வி தமிழகத்தில் சிறப்பாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருப்பது மெட்ரிக் பள்ளிகள் தான். சமூக நீதி உருவாக, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை களைய கல்வியை தான் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும். ஆனால், கல்வி முறையில் பல ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. தமிழகத்தில் 82 சதவீத மாணவர்கள் மாநில பாடத்திட்டத்திலும், 25 லட்சம் மாணவர்கள் மெட்ரிக் பாடத்திட்டத்திலும் படிக்கின்றனர். இரு பிரிவிலும், பாடத்திட்டங்கள் மாறுகின்றன. எல்லா பாடத்திட்டமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்; சமூக நீதியை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டாலும், மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கும். சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தில், மெட்ரிக் பாடத் திட்டத்திலும், மாநில பாடத் திட்டத்திலும் உள்ள நல்ல கருத்துக்களை, நல்ல முறைகளை உள்ளடக்கி, தமிழகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதால், பாடத்திட்டம் தயாரிப்பில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பையும் எடுத்துக் கொண்டுள்ளோம். பாட வரையறை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். அனைவரது கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு தான் முடிவு செய்வோம். என்றார்.