வி.ஆர்.டி., மகளிர் பள்ளியில் படிகள் படிப்பகம் துவக்கம்
ஆனைமலை வி.ஆர்.டி., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவியரின் கற்றல், வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், படிகள் படிப்பகம் துவக்க விழா நடந்தது. முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்கம் தலைமை வகித்தார். ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். படிகள் படிப்பகத்தின் நிறுவனர் ஆசிரியர் ஜெயக்குமார் வரவேற்றார்.கல்வி மாவட்ட அதிகாரி முருகேசன் பேசுகையில், மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் படிகள் படிப்பகம் துவங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படிப்பகத்தை மாணவியர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாசிக்கும் போது, வாசிப்பு திறன் மேம்படும். சுழற்சி முறையில் மாணவியர் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கலாம், என்றார்.தலைமையாசிரியர் (பொ) மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவியருக்கு 500 புத்தகங்கள் வீட்டுக்கு சென்று வாசிக்க வழங்கப்பட்டது.