படிப்பு மாணவர்களின் சொத்து: இயக்குனர் பொன்வண்ணன் பேச்சு
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தக திருவிழா நடந்து வருகிறது.நேற்று (21ம் தேதி) நடந்த நிகழ்ச்சியில், இயக்குனர் பொன் வண்ணன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று எழுத்தாய் மலர்வோம் என்ற தலைப்பில், பேசியதாவது: இந்த மேடை எனக்கு புதிதல்ல, புத்தக திருவிழாவில் பங்கேற்பது என்பது, கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நான் செய்து வரும் பணி. இங்கு அமர்ந்துள்ள பள்ளி குழந்தைகளை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது.உங்களுக்கு எது அடையாளமாக திகழ்கிறதோ அதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். படிப்பு என்பது பள்ளி மாணவர்களாகிய உங்களின் சொத்து. எழுத்து, படிப்பை சிறு வயதிலிருந்தே ஆரம்பித்தால் எதையும் சாதிக்க முடியும். இந்த பேச்சுக்கள் உங்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் என, நம்புகிறேன் என்றார்.தொடர்ந்து, ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், புத்தக திருவிழா கண்காட்சியில், அமைக்கப்பட்ட தினமலர் தாமரை பிரதர்ஸ் பதிப்பக அரங்கிற்கு வந்த இயக்குனர் பொன்வண்ணன் சோழர்கள் இன்று, அந்துமணியின் பதில்கள், சங்ககால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புத்தகங்கள், மன அழுத்தத்திலிருந்து நிம்மதி, நல்லிரவு, ஊட்டி சுற்றுலா உலகின் சுவாசம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை பார்வையிட்டார். பின், சோழர்கள் இன்று புத்தகத்தை வாங்கினார்.