பள்ளி சுவரில் எழுதப்பட்ட தி.மு.க., மாநாட்டு விளம்பரம்
கடவூர்: தரகம்பட்டி அரசு பள்ளி சுவரில் அத்துமீறி, தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டு விளம்பரம் எழுதப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தரகம்பட்டியில் அரசு நடுநிலை பள்ளி, அரசு மேல்நிலை பள்ளி ஆகியவற்றில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க., இளைஞரணி மாநாடு சேலத்தில் டிசம்பர், 17-ல் நடக்கிறது.இதற்காக, தி.மு.க., கரூர் மாவட்ட கடவூர் மேற்கு ஒன்றியம் சார்பில், அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுப்பட்டு வருகின்றன. இதில், தரகம்பட்டியில் அரசு உயர்நிலை பள்ளி, அரசு மேல்நிலை பள்ளி சுவர்களில், தி.மு.க,. இளைஞர் அணி மாநாடு தொடர்பாக விளம்பரங்கள் எழுதப்பட்டு உள்ளன. இது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:அரசு அலுவலக கட்டிட சுவர் உள்ளிட்ட பல இடங்களில் அரசியல் கட்சியினர் எந்தவித அனுமதியும் பெறாமல் விளம்பரம் செய்வது தொடர்கிறது. தற்போது அரசு பள்ளி சுற்றுச்சுவரை அரசியல் கட்சியினர் விட்டு வைப்பதில்லை. இவ்வாறு தான் தரகம்பட்டியில் அரசு பள்ளிகளில் தி.மு.க.,வினர் விளம்பரம் செய்துள்ளனர். ஆளுங்கட்சியினர் விளம்பரம் செய்யும் நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர்.இதை பார்த்து மற்ற கட்சினர் விளம்பரம் செய்ய தொடங்கி விடுவர். பின், விளம்பர போஸ்டர்கள் ஒட்ட தொடங்கினால், பள்ளி மாணவ, மாணவியரின் கவன சிதைவு ஏற்படும். இவற்றை அழித்து, தேசிய தலைவர்களின் படங்கள், திருக்குறள், நல்ல சிந்தனைங்களை எழுத, மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.