இலங்கை அதிபருடன் சத்குரு மண் குறித்து கலந்துரையாடல்
தொண்டாமுத்தூர்: துபாயில் நடந்து வரும் உலக மண்வள பாதுகாப்பு மாநாட்டில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடன், மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு கலந்துரையாடினார்.ஐ.நா.,வின் பருவநிலை பாதுகாப்பு மாநாடு, துபாயில் நடந்து வருகிறது. இதில், மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு பங்கேற்று, மண்வள பாதுகாப்பு குறித்து பல்வேறு அமர்வுகளில் சிறப்பு உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இம்மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுடன், மண்வள பாதுகாப்பு குறித்து, சத்குரு நேரில் கலந்துரையாடினார்.இக்கலந்துரையாடல் குறித்து சத்குரு வெளியிட்டுள்ள பதிவில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுடன், மண்வளத்தை பாதுகாப்பது குறித்தும், வெப்பமண்டல நிலப்பகுதிகளில் அதன் தொடர்பு குறித்தும், ஒரு அர்த்தமுள்ள கலந்துரையாடல் நிகழ்த்தினேன்.இவ்விஷயத்தில் சரியாக கவனம் செலுத்துவதன் மூலம், இலங்கையின் வளமான மண் மற்றும் பொருத்தமான பருவ நிலையால் அந்நாட்டிற்கும், அந்நாட்டு விவசாயிகளுக்கும் ஒரு வளமான சூழலை உருவாக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.