போலி சான்றிதழ் தயாரித்த ஆந்திரா கும்பல் கைது
சென்னை: ஆந்திராவைச் சேர்ந்த கல்லெம் சாய் ரெட்டி என்பவர் வேலைக்காக, அமெரிக்கா செல்ல சென்னையில் உள்ள துாதரகத்தில் நேர்முகத் தேர்வில் பங்கேற்றார். அப்போது அவர் சமர்பித்த பணி அனுபவ சான்றிதழ் போலியானது என்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கா துாதரக அதிகாரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.புகாரைத் தொடர்ந்து கல்லெம் சாய் ரெட்டியை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரித்தனர். ஆந்திரா சித்துாரைச் சேர்ந்த ருஷ்கேஷ் ரெட்டி,33, திவாகர் ரெட்டி, 32 ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து கொடுத்து தெரியவந்தது. அவர்களையும், மோசடியில் உடந்தையாக இருந்த சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்த முகமது ரியாஸ், 30, நொளம்பூரைச் சேர்ந்த மகேஷ்வரன், 44 ஆகியோரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, கணிணி, மடிக்கணிணி, மொபைல்போன்கள், அச்சு இயந்திரம், பள்ளி, கல்லுாரி, பல்கலை பெயர்களில், 500க்கும் மேற்பட்ட போலி கல்விச் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இவர்கள், 2019ல் இருந்து டில்லி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் நேற்று பார்வையிட்டார். மேலும் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை வெகுவாக பாராட்டினார்.