உள்ளூர் செய்திகள்

சாதனைகளுக்கு காரணமானவர்கள் மாணவர்கள்: பிரதமர் மோடி பேச்சு

திருச்சி: இந்த சமூகம் மாணவர்களை நம்பிக்கையுடன் பார்க்கிறது. வரலாற்றில் பல மாற்றங்களும், சாதனைகளுக்கும் மாணவர்களே காரணமானவர்களாக திகழ்கின்றனர் என திருச்சியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.திருச்சி பாரதிதாசன் பல்கலை.,க்கு வந்த பிரதமர் மோடி, அங்குள்ள பாரதிதாசன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு பட்டம் பெறும் மாணவர்களுடன் பிரதமர் மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன், துணைவேந்தர் செல்லம் ஆகியோர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.நடராஜர் சிலை பரிசுதேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு பட்டமளிப்பு விழா துவங்கியது. பிரதமருக்கு நடராஜர் சிலையை துணைவேந்தர் செல்லம் நினைவுப்பரிசாக வழங்கினார்.பட்டங்கள் பெற்ற மாணவர்கள்1,528 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியதன் அடையாளமாக 30 பேருக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்கினார்.தொடர்ந்து,  வணக்கம், எனது மாணவ குடும்பமே என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை துவக்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா எனக்கு முக்கியமானது. 2024ல் நான் பங்கேற்கும் முதல் அரசு நிகழ்ச்சி இது ஆகும். இளைஞர்கள் அதிகம் இருக்கும் மிக அழகிய மாநிலமான தமிழகத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் முதல் பிரதமர் என்ற பெருமை கிடைத்ததும் மகிழ்ச்சி.பண்டைய காலத்தில்பண்டைய காலத்தில் காஞ்சி, மதுரை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய நகரங்கள் கல்வியில் சிறந்து விளங்கின. பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் பட்டம் பெற்றதில் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பங்கு உண்டு. இந்த சமூகத்திற்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இந்த சமூகம் உங்களை நம்பிக்கையுடன் பார்க்கிறது. வரலாற்றில் பல மாற்றங்கள் சாதனைகளுக்கு காரணமானவர்கள் மாணவர்கள்.பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், விமானம், நெடுஞ்சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறோம்.இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவின் திறமையை இளைஞர்கள் உலகுக்கு பறைசாற்றுகின்றனர். இந்தியாவை புதிய நம்பிக்கையோடு உலக நாடுகள் பார்க்கின்றன. கற்ற கல்வியும், அறிவியலும் வேளாண்மையை மேம்படுத்த விவசாயிகளுக்கு கைக்கொடுக்க வேண்டும். கற்கும் கல்வி அறிவை வளர்ப்பதோடு, சகோதரத்துவம், நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டும்.பல்கலையில் படிப்பதோடு உங்கள் கற்றல் நின்று விடக்கூடாது. நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவையான திறன்களை வளர்த்து கொண்டு இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.பாரதிதாசன் கவிதையை மேற்கோள் காட்டிய பிரதமர்இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதிதாசன் கூற்றுப்படி 2047 ஐ நோக்கி நம்பிக்கையுடன் பயணிப்போம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்