உள்ளூர் செய்திகள்

படிக்கட்டு பயணத்தால் விபத்து: விபரம் கோரும் உயர்நீதிமன்றம்

மதுரை: படிக்கட்டு பயணத்தால் விபத்தை தடுக்க எத்தனை பஸ்களில் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதை தடுக்க பள்ளிகளின் நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடும் வகையில் 2013 ல் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்தது.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது.தமிழக அரசு தரப்பு: 52 முதல் 60 சதவீத பஸ்களில் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: படிக்கட்டு பயணத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதிக மதிப்புமிக்க மனித உயிர்கள் பலியாகின்றன. இதை தடுக்க சட்டத்தை அமல்படுத்தக்கூடிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள், தனியார் பஸ்களின் படிக்கட்டுகளில் கதவுகளை பொருத்த வேண்டும்.எத்தனை அரசு, தனியார் பஸ்களில் ஏற்கனவே கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன, பொருத்தப்படாத மற்ற பஸ்களில் எவ்வளவு காலவரம்பிற்குள் கதவுகள் அமைக்கப்படும் என்பது குறித்து தமிழக உள்துறை செயலர் ஜூன் 12 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்