பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு இலவச சீருடைகள்
கோவை: மாநகராட்சி துவக்க பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.கோவை ராமநாதபுரம், பெருமாள் கோவில் வீதி, மாநகராட்சி துவக்க பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சீருடைகளை கலெக்டர் கிராந்திகுமார் வழங்கி பேசுகையில், பள்ளிக்கல்வி துறையில் முதல்வரின் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன்பே, முன்பதிவு துவங்கி இந்த கல்வி ஆண்டில் புதிய மாணவர்களின் சேர்க்கை 3.5 லட்சமாக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள, 1,373 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்,1 முதல் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் சத்துணவு உண்ணும் 1,03,776 மாணாக்கர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.