தொழிலாளர் நலத்துறை சார்பில் மாணவிகளுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி
புதுச்சேரி: கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொழிலாளர் துறை சார்பில் வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு மேல்படிப்பு குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி பள்ளி அளவில் நடத்தி வருகிறது. அதன்படி, இந்தாண்டு புதுச்சேரி நகர மற்றும் கிராமப்புற பகுதியில் உள்ள 46 அரசு பள்ளிகளில் வழிகாட்டி நிகழ்ச்சி நடந்து வருகிறது.கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் பிரசாத் தலைமை தாங்கினார். வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரி காமராஜ் கோபு, உயர் கல்வி குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பிளஸ் 2 பயிலும் 210 மாணவிகள் பங்கேற்று பயன்பெற்றனர். வழிகாட்டி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.