ஆசிரியர்கள் காண்பிக்கும் வழியில் நல்ல பிள்ளைகளாக திகழுங்கள்
கோவை : ஆசிரியர்கள் காண்பிக்கும் வழியை பின்பற்றி, சமுதாயத்தில் நல்ல பிள்ளைகளாக மாணவர்கள் திகழ வேண்டும், என பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பேசினார்.வின்சென்ட் ரோட்டில் உள்ள மன்பஉல் உலுாம் மெட்ரிக் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழாவில், 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு விருது வழங்கி, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் நேற்று கவுரவித்தார்.அவர் பேசுகையில், ஒரு பள்ளியின் தரம், மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அளவை பொறுத்தும் அமையும், கற்பிக்கும் தரத்தை பொறுத்தும் அமையும். இப்பள்ளி, தரத்தின் அடிப்படையில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.பெற்றோர் தமது குழந்தைகளை, அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். மாணவர்களின் திறமையை துாண்டுதல் வாயிலாக, வெளிக்கொண்டு வருபவர்கள் ஆசிரியர்கள். எனவே, ஆசிரியர்கள் காண்பிக்கும்வழியில், சமுதாயத்தில் நல்ல பிள்ளைகளாக மாணவர்கள் திகழ வேண்டும், என்றார்.கோவை எம்.பி., ராஜ்குமார், பள்ளி முதல்வர் மும்தாஜ் ஷா உட்பட பலர் பங்கேற்றனர்.