தமிழ் வளர்ச்சி துறையில் ஆய்வு பணிகளில் சுணக்கம்?
கோவை: தமிழ் வளர்ச்சித் துறையில் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. போதிய பணியாளர்கள் இல்லாததால், கூடுதல் பணிச்சுமை காரணமாக கள ஆய்வுகளை மேற்கொள்வதிலும் சிக்கல் நீடிப்பதாக தெரிகிறது.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கம், கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் என மாதந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.கூடுதல் பணிச்சுமைதிருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகளும் இத்துறை சார்பில் நடத்தப்படுகிறது. இதுதவிர, திருக்குறள் பயிற்சி வகுப்புகள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டங்களும் இத்துறையால் செயல் படுத்தப்படுகின்றன.இதனிடையில், நீதித்துறை தவிர்த்து அனைத்து அரசு அலுவலகங்கள், சார்நிலை அலுவலங்கள், மாநில கல்வியின் கீழ் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெயர்ப்பலகைகள் தமிழில் உள்ளனவா? அரசு அலுவலர்கள் தமிழில் கையெழுத்திடுகின்றனரா? என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது இத்துறையின் முக்கிய பணியாகும்.ஆனால், கண்காணிப்பாளர், உதவியாளர், தட்டச்சர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் பெரும்பாலான மாவட்டங்களில் காலியாக உள்ளதால், இந்த ஆய்வுகளை முறையாக செய்ய முடிவதில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும், உதவி இயக்குநர் பணியிடங்களும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி சில இடங்களில் காலியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் பெரிய நிகழ்ச்சிகள் நடக்கும் போது, பிற மாவட்ட பணியாளர்கள் அங்கு பணிக்கு அழைக்கப்படுகின்றனர். அந்த சமயங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதோடு, இருக்கும் பணியாளர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணியாளர் நியமனங்கள் இல்லாத நிலையில், போட்டிகள் நடத்த மற்ற துறைகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள முடியும். பன்மொழி பயன்பாடு உள்ள சில அரசு அலுவலகங்களில் தமிழ் மொழி பயன்பாட்டில் இடர்பாடுகள் காணப்படுகின்றன.போட்டிகளுக்காக வழங்கப்படும் நிதியும் போதுமானதாக இல்லை. ஆண்டு முழுவதும் துறை சார்பில் போட்டிகள், பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதால், காலிப்பணியிடங்களை நிரப்பி கூடுதல் பணியாளர்களையும் நியமிக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றார்.