உள்ளூர் செய்திகள்

பொதுத் தேர்வில் பிட் கலாசாரம்: கல்வியாளர்கள் அதிருப்தி

பொதுத்தேர்வில் பிட் அடிக்கும் கலாசாரம் அதிகரித்துள்ளதாக கல்வியாளர்கள், பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்னர்.கடந்த 2ம் தேதி துவங்கி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 109 மையங்களில் 22 ஆயிரத்து 516 மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். இத்தேர்வுப் பணிகளை 109 மையங்களில் தலா ஒரு முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் ஒவ்வொரு அறைக்கும் ஒரு கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளதோடு, திடீர் சோதனை நடத்தும் விதத்தில் முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் முதுகலை ஆசிரியர்கள் கொண்ட 135 பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.தேர்வில் மாவட்ட கண்காணிப்பாளரான பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ஜெயக்குமார் தலைமையில் 10 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டு திடீர் விசிட் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.ஆனாலும், இந்த தேர்வின் போது மாணவர்கள் பிட் அடித்து தேர்வு எழுதுவதை சரியாக கண்காணிக்காமல் இருப்பதாக கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களுடைய அதிருப்தி ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் நகரில் காந்தி சிலை, ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள சில ஜெராக்ஸ் கடைகளில், காலை தேர்வு தொடங்குவதற்கு முன் பள்ளி மாணவர்கள் சிலர் வரிசையில் நின்று, புத்தகத்திலிருந்து 'கட்' செய்யப்பட்ட 'பிட்' காப்பிகளை ஜெராக்ஸ் எடுத்து, அதனை கையில் அடுக்கி எடுத்துச் சென்றதும், கடந்த வாரம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், கடந்த 9ம் தேதி நடந்த வேதியியல் தேர்வின் போது, விழுப்புரத்தில் உள்ள 2 தனியார் பள்ளிகளில், மாணவர்கள் பிட் அடித்ததை கண்காணிக்கத் தவறியதாக பறக்கும் படையைச் சேர்ந்த 5 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்திருந்தார்.ஒரு சில பள்ளிகளில், மாணவர்கள் பார்த்து எழுதுவதற்கும், காப்பியடிப்பதற்கும் விடுவதாக, புகார் எழுந்துள்ளது. பறக்கும் படையினர் சோதனையின் போது, தேர்வு மைய அறைகளில் ஏராளமான 'பிட்' காப்பிகளை பறிமுதல் செய்துள்ளனர்.கண்காணிப்பில் உள்ள இணை இயக்குநரும், பிட் காப்பிகளை பறிமுதல் செய்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்வுக்காக இரவு, பகலாக கண் விழித்து படித்து தேர்வு எழுதும் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்